05.02.2026 ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற உரை.

பிப்ரவரி 5ஆம் தேதி ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற உரை நிகழ்த்துவதற்காக சென்றிருந்தேன். மயிலாடுதுறை புகைவண்டி நிலையத்தில் இறங்கியவுடன் என்னை அன்போடு வரவேற்று உபசரித்து பள்ளிக்கூடம் அழைத்துச் சென்றார்கள். பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம் அது. அவர்களின் விளையாட்டு திடலுக்கு என்னை அழைத்து மாணவர்களுக்கு பரிசு வழங்குமாறு கூறி என்னை கௌரவித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். மாலை 3 மணி அளவில் இலக்கிய மன்ற உரை மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான மேடை தயாராக இருந்தது. சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியரும் பெற்றோர்களும் பள்ளியின் முன்னாள் மாணவர்களும்மௌலானா அப்துல் கலாம் ஆசாத் கிராமக் கமிட்டி உறுப்பினர்களும் பொதுமக்களும் பெருமளவு கூடியிருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் மாணவ மாணவியருக்கு தேவையான நற்சிந்தனைகளை தனிநபர் நடிப்பு மௌன நடிப்பு மேஜிக் பாடல் செய்திகள் பொது அறிவு விளையாட்டு போன்றவற்றின் மூலம் முகபாவனைகளோடு விளக்கிக் கூறினேன். பார்த்த அனைவரும் குறிப்பாக ஆறாம் வகுப்பு மாணவர் முதல் முதியவர் வரை பலரும் எனக்கு கை கொடுத்து பாராட்டி வாழ்த்தியது எனக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது. அல்ஹம்துலில்லாஹ். பள்ளியின் தலைமை ஆசிரியர் என்னை அறிமுகப்படுத்திய விதமும் ஆசிரியர்கள் எனக்கு அளித்த வரவேற்கும் என் உள்ளத்தில் நிற்கிறது. பள்ளியின் தாளாளர் அவர்கள் எனக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்கள். ஏறக்குறைய ஒரு மணி நேரம் என்னுடைய உரை இருந்தும் மாணவர்கள் அமைதியோடுு கவனித்து வந்தது .... எனக்கு மனநிறைவை வழங்கியது.காலை முதல் பள்ளியில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் கவனித்துக் கொண்டிருந்தேன். பள்ளியின் அனைத்து ஆசிரியர் பெருமக்களும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் ஒன்றிணைந்து ஒரு குடும்பம் போல பள்ளி ஆண்டு விழாவை சிறப்பாக நடத்தியது என் கண் முன் நிழலாடுகிறது. மரங்கள் அடர்ந்த சோலையில் ஒரு கல்விச்சோலை. என் சிறு வயதில் இப்பள்ளியின் அறிமுகம் எனக்கு கிடைக்கவில்லையே என சில கணங்கள் ஏங்கிப் போயிருந்தேன் என்பதே உண்மை. அழகான பள்ளிவாசல். அதில் நிறைந்திருக்கும் மாணவர்கள். அவர்களின் தொழுகை மற்றும் இபாதத்துகள் என் மனதைக் குளிர்ச்சி அடைய வைத்தது. பள்ளியை பிரிய மனமில்லாமல் இருந்தாலும், அடுத்த நாள் தூத்துக்குடியில் நிகழ்ச்சி இருப்பதால் இரவு பள்ளியை விட்டு கிளம்பி விட்டேன். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டு நாட்கள் ஆனபோதும் பள்ளியின் நினைவுகள் என் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விட்டது. நான் 75க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளுக்கு சிறப்புரை ஆற்ற சென்றிருந்தாலும் ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல்நிலைப்பள்ளியின் நினைவுகள் என்றும் என் மனதை விட்டு அகலாது என்பதில் ஐயமில்லை. இத்தகைய சிறந்ததொரு வாய்ப்பை எனக்கு பெற்றுத் தந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறேன். இப்பள்ளியோடு என்னை அறிமுகம் செய்து வைத்த மௌலானா அரபி ஆசிரியர் இனாமுல் ஹசன் புகாரி அவர்களுக்கு அல்லாஹ் அழகிய நற்கூலியை தருவானாக. மேலும் என்னை வரவேற்று பெருமைப்படுத்திய பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகிகள் மற்றும் உள்ள அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்கி அனைவரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக

Comments